“முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடவில்லை” – இயக்குநர் சேரன் விவரிப்பு

0
23

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தவர் இயக்குநர் சேரன். தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யை விமர்சித்து சில பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். முதல் நாளிலேயே 200 யூனிட் மின்சாரம் இலவசம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தது உள்ளிட்டவை விமர்சனங்களை ஏற்படுத்தின. இது தொடர்பாக பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் வெளியிட்ட பதிவில், “மக்களே, அனைத்து மக்களையும் சேர்த்துதான், கட்சி பேதமின்றி சொல்கிறேன். நீண்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவரை நம்பி ஒரு பகுதி மக்கள் முதல்வர் என வாக்களித்து மறு பகுதி மக்கள் அதற்கு ஆதரவும் தந்து முதல்வர் நாற்காலியில் அமரவைத்தும் பார்த்தாகிவிட்டது. மக்களும் முழுக்கவே அனைவரும் புதியவர்கள் வேண்டும் என தெரிந்துதான் இந்த வாக்கை அளித்திருக்கிறார்கள்.

பதவிப் பிரமாணம் முடிந்தவுடனேயே விமர்சனங்களை முன்வைக்காமல் வாழ்த்திவிட்டு அமைதி காப்பதே நன்று. அதற்குள் தமிழ்த்தாய் பின்னால் போய்விட்டாள், 200 யூனிட் கரன்ட் என்னாச்சு என முழங்காமல் கொஞ்சம் வேலை செய்ய விடலாம்… தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் விஜய் போடச் சொல்லி இருப்பாரா? 200 யூனிட் ஃபிரீ என்பதில் என்ன குளறுபடி? இதெல்லாம் முதல் நாளிலேயே கேட்கலாமா?

அவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் முறையாக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். விஜய் முழுக்க முழுக்க புதியவர். அவருக்கு இந்த அரசியல் சட்ட திட்டங்கள் நுணுக்கமாக புரிய நாட்களெடுக்கும்… பொறுத்திருங்கள்.

அவர் புரிந்து நன்றாக செயல்பட்டுவிட்டால் நல்லதுதானே. அப்படி இல்லையென்றால் மக்களே புரிந்து மாற்றி விடுவார்கள் தானே.

இதை நான் யாருக்கு ஆதரவாகவும் வாசிக்கவில்லை. இல்லை, உடனே விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லக் கூடாது. விருப்பு வெறுப்புகளை துறந்து பொதுவான ஓர் அமைதியான சமூகம் உருவாக வழி அமைப்போம் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள். நல்ல சமுதாய கட்டமைப்பை உருவாக்க உங்கள் அர்பணிப்பை தாருங்கள்” என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here