IPL 2026 சீசனில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் விலகல்

0
24

ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் விலகியுள்ளார். அவர் இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட இருந்தார்.

31 வயதான டக்கெட்டை ரூ.2 கோடிக்கு மினி ஏலத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது டெல்லி அணி. இந்நிலையில், அவர் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதோடு டெல்லி அணியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

“ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் மிக கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். நீண்ட யோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுத்துள்ளேன். இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது பால்ய கால கனவு. அதனால் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு என்னால் முடிந்த பங்களிப்பை வழங்க விரும்புகிறேன். எதிர்வரும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தும் வகையில் நான் மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்க விரும்புகிறேன்.

டெல்லி அணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த அணிக்காக விளையாட ஆர்வமாக இருந்தேன். அணியை கட்டமைக்க டெல்லி நிர்வாகம் எடுத்த முயற்சிகளை அறிவேன். அதை பாராட்டுகிறேன். அதில் என்னால் ஏற்பட்டுள்ள இடையூறுக்கு வருந்துகிறேன். டெல்லி ரசிகர்கள் இடத்திலும் மன்னிப்பு கோருகிறேன்” என டக்கெட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் விதிமுறையின் படி ஏலத்தில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர், தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே விலகினால் அவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடவும், ஏலத்தில் பங்கேற்கவும் தடை செய்யப்படுவார். தொடரில் இருந்து விலகியதற்கான உரிய காரணத்தை தெரிவித்தால் இதில் வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here