பெண்களுக்கு எதிராக கடந்தாண்டில் 76,657 சைபர் குற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய சைபர் குற்றம் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார் கூறியதாவது: பெண்களுக்கு எதிராக கடந்த 2022ல் 62,224, 2023ல் 40,066, 2024ல் 48,335 மற்றும் 2025ல் 76,657 சைபர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தேசிய சைபர் குற்றப் பதிவு இணையதளம் தெரிவிக்கிறது.
கடந்த 2024ம் ஆண்டை விட 2025ல் 28,322 குற்றங்கள் அதிகம் நடைபெற்றுள்ளன. கடந்தாண்டில் ஆபாச படங்கள் தொடர்பான புகார்கள் 37,743 பதிவாகியுள்ளன. பாலியலை தூண்டும் செயல்கள் தொடர்பாக 19,703 புகார்கள் வந்துள்ளன. பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்களை அனுப்பியதாக 8,780 புகார்கள் வந்துள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தகவல்களை அனுப்பியதாக 10,431 புகார்கள் வந்துள்ளன. ஆன்லைன் மற்றும் சமூக ஊடகம் தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளன. 2021ல் 72,301, 2022ல் 1,31,634, 2023ல் 1,41,264, 2024ல் 1,57,054 மற்றும் 2025ல் 1,73,766 குற்றங்களும் பதிவாகியுள்ளன. சட்டம் ஒழுங்கு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. பெண்களுக்கு எதிரான குற்றங்களை சட்ட அமைப்புகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளன. இவ்வாறு பந்தி சஞ்சய் குமார் தெரிவித்தார்.














