மேற்கு ஆசிய நிலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவை நேற்று, நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. இதையடுத்து மேற்காசிய நிலவரம் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது இந்த விவகாரம் குறித்து முழு அளவில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
அப்போது அவையை நடத்திய பாஜக மூத்த உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “பதாகைகள் மூலம் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு விரிவாக பதில் அளிக்கும்” என்றார். சபாநாயகர் பதவியிலிருந்து ஓம் பிர்லாவை நீக்குவதற்கான தீர்மானம் ஏற்கெனவே நிகழ்ச்சி நிரலில் உள்ள நிலையில் எப்படி ஒரே நாளில் 2 பிரச்சினைகளை விவாதிக்க முடியும்?” என அவர் வியப்பு தெரிவித்தார்.
“அமைச்சரின் பதிலில் திருப்தி அடையாவிட்டால் இந்தப் பிரச்சினை குறித்து விவாதம் கோரி அலுவல் ஆய்வுக் குழுவை நீங்கள் அணுகலாம்” என்றும் அவர் கூறினார்.
ஜெய்சங்கர் தனது உரையை முடித்த பிறகு, “அவையின் நெறிமுறைகளை எதிர்க்கட்சிகள் பின்பற்றவில்லை” என அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டினார்.
அமைதி காக்குமாறு அவைத் தலைவர் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டது.














