2 ஆண்டுகளில் செய்த மக்கள் பணி என்ன? – மத்திய அமைச்சர்களிடம் விவரம் கேட்கும் பிரதமர் மோடி

0
19

கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்காக அமைச்சகங்கள் செய்த பணிகளின் விவரத்தைக் கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இவற்றை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த 2024-ல் நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், முக்கியப் போட்டியாளரான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றார். இவருடன் பதவியில் அமர்ந்த மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி தொடர்ந்து மக்கள் பணி செய்ய வலியுறுத்தி வருகிறார்.

இந்த வகையில் அவர், கடந்த இரண்டு வருடங்களில் மத்திய அமைச்சகங்கள் மக்களுக்காக செய்த பணிகள் என்ன எனக் கேட்டிருக்கிறார். இந்த தரவுகளை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி அனைத்து அமைச்சர்களுக்கும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘அனைத்து அமைச்சர்களும் அந்தந்த அமைச்சகங்களில் முக்கிய சீர்திருத்தங்கள் குறித்த விரிவான விளக்கக் காட்சியைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரங்களுடனான தரவுகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் அமைக்கங்களிலான சீர்திருத்தங்களின் தாக்கத்தை விளக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2024-ல் புதிய அரசு அமைந்த பிறகு அமைக்கங்களின் சீர்திருத்தங்கள் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை பிரதமர் மோடி அறிய விரும்புகிறார். இதில், மத்திய அரசின் கொள்கை மாற்றங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் இடம்பெற்றுள்ளன.

அரசு சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தில் முன்னேற்றங்கள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புகளின் மீதான மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் விளக்கும் படி கோரப்பட்டுள்ளது. இவை பொதுமக்களுக்கு எவ்வாறு பயனளித்துள்ளது என்பதை பிரதமர் மோடி தன் பிரச்சாரங்களில் வெளிப்படுத்த விரும்புகிறார்.

இதன் மீதான விளக்கக் காட்சிகளில் சீர்திருத்தங்களின் பின்னணி, நோக்கங்கள், செயல்படுத்தல் செயல்முறை, எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றின் தீர்வுகள் மற்றும் அடையப்பட்ட முடிவுகள் பற்றிய உண்மை விவரம் இருக்கும்.

கொள்கை வகுப்பது மட்டுமல்ல, அவற்றை திறம்பட செயல்படுத்துவதும், களத்தில் முடிவுகளை உறுதி செய்வதும் ஒரு பொறுப்பான அரசின் முன்னுரிமை என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றின் மூலம், அமைச்சகங்களின் பணிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அவை மக்களை மையமாகக் கொண்டதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற மேலும் உத்திகள் வகுக்கப்படும்’ எனத் தெரிவித்தனர்.

இந்த அறிவுறுத்தல் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமரால் அமைச்சர்களுக்கு நேரடியாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிவுறுத்தலுக்கு பின் அனைத்து அமைச்சகங்களும் அந்தந்த துறைகளுக்கான சீர்திருத்தங்களின் பட்டியலைத் தொடர்ந்து தயாரித்து வருகின்றன.

இவை, விரைவில் வரவிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் பிரச்சாரங்களில் பாஜக சார்பில் முன்னிறுத்தப்பட உள்ளன. ஏனெனில், மத்திய அரசுக்கு தலைமை ஏற்றுள்ள பாஜக தொடர்ந்து பொதுமக்களுக்கு பலன் தரும் தனது நிர்வாகத் திறமையால் வெற்றியைத் தொடர விரும்புவதாக தகவல்.

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மதிப்பாய்வின் மூலம், மத்திய அமைச்சர்களின் நிர்வாகத் தன்மையும் மதிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மத்திய அமைச்சரவை விரிவக்கம் அல்லது மாற்றத்திற்கும் பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here