உலக பீச் வாலிபால் போட்டி ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் இன்று முதல் (மார்ச் 4) வரும் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஒடிசா மாநிலத்திலுள்ள கேஐஐடி பல்கலைக்கழகம் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இரு பிரிவிலும் சேர்த்து 52 நாடுகளைச் சேர்ந்த 82 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
லீக் மற்றும் நாக்-அவுட் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். கேஐஐடி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டூட்டி சந்த் தடகள மைதானத்தில் போட்டிகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள பீச் வாலிபால் அரங்கில் நடைபெறவுள்ளன.
போட்டி தொடக்க விழாவில் சர்வதேச வாலிபால் சம்மேளனத் தலைவர் பேபியோ அஸிவேடோ, கேஐஐடி பல்கலைக்கழக வேந்தர் அச்சுதா சமந்தா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். அடுத்த 3 ஆண்டுகள் வரை இந்தப் போட்டி புவனேஷ்வரிலேயே நடைபெறவுள்ளது என்று பேபியோ அஸிவேடோ தெரிவித்துள்ளார்.














