போர்ப் பதற்றத்துக்கு இடையே 149 பயணிகளுடன் துபாயில் இருந்து டெல்லி வந்தடைந்த முதல் ஏர் இந்தியா விமானம்

0
18

போர்ப் பதற்றத்துக்கு இடையே துபாயிலிருந்து டெல்லிக்கு நேற்று முதலாவது ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது.

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா ஆகிய நாடுகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால் பலர் தாய் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த போர்ப் பதற்றத்துக்கு இடையே நேற்று முன்தினம் மாலை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அபுதாபியில் இருந்து ஒரு விமானம் நேற்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் 149 பயணிகள் வந்தனர்.

அதேபோல மற்றொரு விமானம் அபுதாபியில் இருந்து கிளம்பி மும்பையில் நேற்று தரையிறங்கியது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பயணிகளைக் கண்டதும் அவர்களது குடும்பத்தார், உறவினர்கள் கட்டியணைத்து மகிழ்ச்சியடன் வரவேற்றனர். அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரண்டது.

விமானத்தில் தாயகம் திரும்பிய இந்தியர் ஒருவர் கூறும்போது, ”வானத்தில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதை எங்களால் நேரடியாகவே பார்க்க முடிந்தது. இன்னும் அங்கு போர்ப்பதற்றம் உள்ளது” என்றார். இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நேற்று 10 சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”துபாயி லிருந்து எங்கள் விருந்தினர்கள் மற்றும் குழுவினரை ஏஐ 916 டி விமானத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மீண்டும் விமானம் இயக்குவதை சாத்தியமாக்கிய எங்கள் குழுக்கள், இந்திய அரசு, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்கு நரகம் (டிஜிசிஏ) மற்றும் துபாயில் உள்ள உள்ளூர் அதிகாரிகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here