கமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் விபுல் ஷா தயாரித்துள்ள படம், ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’. இப்படம் நேற்று (பிப்.27) வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி தேவ் நம்பூதிரி உள்ளிட்டோர் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
கேரளாவை வகுப்புவாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இவ்வழக்கின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, “கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு எதிரான நிலுவையில் உள்ள மனுக்கள் இறுதியாக விசாரிக்கப் பட்டு முடிவு செய்யும் வரை, படத்தை வெளியிட வேண்டாம்.
2 வாரங்களுக்கு படத்தை திரையிட இடைக்காலத் தடை விதிக்கப் படுகிறது. மேலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் பின்பற்றவில்லை” என்றும் தெரிவித்தார்.
தனிநீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தயாரிப்பாளர் விபுல் ஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் பி.வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை மாலை பரிசீலித்தது.
படத்தின் வெளியீட்டை நிறுத்துவது தயாரிப்பாளருக்குப் பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், படம் எந்த மதத்தையோ அல்லது கேரளாவையோ மோசமாகச் சித்தரிக்கவில்லை என்றும் மேல்முறையீட்டில் வாதிடப்பட்டது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான தனிநீதிபதியின் தீர்ப்பை ஒத்திவைத்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி, அப்படத்தை வெளியிட அனுமதி வழங்கியது.














