ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள், அறிமுக அணியான இத்தாலியுடன் மோதியது.
முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் என்ற நிலையில் கட்டுப்படுத்தியது இத்தாலி அணி.தனது 11-வது அரை சதத்தை கடந்த கேப்டன் ஷாய் ஹோப் 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசினார்.
ராஸ்டன் சேஸ் 24, ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 24, மேத்யூ ஃபோர்டு 16 ரன்கள் சேர்த்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் 1, பிரண்டன் கிங் 4, ரோவ்மன் பவல் 9, ஜேசன் ஹோல்டர் 9 ரன்களில் நடையை கட்டினர். இத்தாலி அணி தரப்பில் பென் மனேண்டி, கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
166 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இத்தாலி அணி 18 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபசட்மாக பென் மனேண்டி 26, ஜேஜே ஸ்மட்ஸ் 24, அந்தோணி மோஸ்கா 19, கிராண்ட் ஸ்டூவர்ட் 12 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஷமர் ஜோசப் 4, மேத்யூ ஃபோர்டு 3, குடகேஷ் மோட்டி 2, அகீல் ஹோசைன் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றில் நுழைகிறது.
சூப்பர் 8 சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது. இத்தாலி அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.














