ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, நெதர்லாந்துடன் மோதுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. கடைசியாக பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து இருந்தது.
நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தை இந்திய அணி, சூப்பர் 8 சுற்றுக்கான சிறந்த பயிற்சி ஆட்டமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும். தொடக்க வீரரான அபிஷேக் சர்மா பார்முக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். கடந்த 18 மாதங்களாக சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் தனது அதிரடி பேட்டிங்கால் ஆதிக்கம் செலுத்தி வந்த அபிஷேக் சர்மா, நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அவர், இன்னும் ரன் கணக்கை தொடங்கவே இல்லை. அமெரிக்காவுக்கு எதிராக முதல் பந்திலேயே ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா, உடல்நலக்குறைவு காரணமாக நமீபியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் களமிறங்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆனால் மறுமுனையில் இஷான் கிஷான் அபாரமான ஃபார்மில் இருப்பதால் அபிஷேக் சர்மாவின் மட்டையில் இருந்து ரன்கள் வெளிப்படாதது அணியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அபிஷேக் சர்மா கடந்த 6 ஆட்டங்களில் 4-ல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இதனால் அவர், பவர்பிளேவில் தனது திட்டங்களில் மாற்றங்கள் செய்யக்கூடும்.
மற்ற பேட்ஸ்மேன்களை போன்று அபிஷேக் சர்மா அதிக அளவில் வித்தியாசமான ஷாட்களை மேற்கொள்வதில்லை. எதிரணியை மிரட்டுவதற்காக கிரீஸின் பயன்பாடு மற்றும் மட்டையை விரைவாக சுழற்றுவதை பலமாக கொண்டுள்ளார்.
பவர்பிளேயில் டீப் கவர் திசை பவுண்டரியை குறிவைப்பதை அபிஷேக் சர்மா அதிகம் விரும்பக்கூடியவர். இதை சரியாக கணித்து அமெரிக்க அணி அந்த பகுதியில் ஒரு ஃபீல்டரை நிறுத்தி அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்தது.
பாகிஸ்தான் அணியும் இதேபோன்று டீப் மிட்விக்கெட் திசையை நோக்கி அடிக்கும் வகையில் பந்தை வீசி அந்த இடத்தில் பீல்டரை நிற்கவைத்து அபிஷேக் சர்மாவை வெளியேற்றி இருந்தது. எனினும் இந்திய அணி ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டதால் எந்தவித அழுத்தமும் இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா ரன்கள் குவிப்பதற்கான முயற்சியில் ஈடுபடக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க கடந்த 2 ஆட்டங்களிலும் இந்திய அணியில் இஷான் கிஷனை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் ரன்கள் சேர்க்க தடுமாறினர். நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெரார்டு எராஸ்மஸ் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியிருந்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான சைம் அயூப் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சுழற்பந்து வீச்சை கையாள்வதில் திட்டங்களை மாற்றி அமைக்கக்கூடும். நெதர்லாந்து அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் 4-வது இடத்தில் உள்ளது.
நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு சவால் கொடுக்க வேண்டும் என்றால் நெதர்லாந்து பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும்.
முன்னதாக காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும்.














