மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பில்கேட்ஸ். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான இவர் தனது அறக்கட்டளை குழுவினருடன் இந்தியா வந்துள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடா பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய இவரை ஆந்திர கல்வி மற்றும் ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றார். இதையடுத்து காரில் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்த பில் கேட்ஸுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் உள்ள ரியல் டைம் கவர்னன்ஸ் கட்டுப்பாட்டு அறையை (ஆர்டிஜிஎஸ்) பில்கேட்ஸ் பார்வையிட்டார். அப்போது அரசு திட்டங்கள் எந்த அளவு, எவ்வளவு விரைவாக மக்களை சென்றடைகிறது என்பதை ஆர்டிஜிஎஸ் மூலம் கண்காணிக்க முடிகிறது என பில்கேட்ஸுக்கு சந்திரபாபு விளக்கினார்.














