ம.பி.யின் காண்டவா நகரின் போலீஸ் லைன் பகுதியில் காவல் துறையினரின் வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி இரவு இரு காவலர்களின் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் திருடுபோனது. இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் அலிராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அலிராஜ்பூரில் போலீஸ்காரர் ஒருவரால் தீபேஷ் தாக்கப்பட்டார். அப்போது முதல் அவர் போலீஸாரின் வீடுகளை மட்டுமே குறிவைத்து திருடி வந்துள்ளார்.
திருடுவதற்கு முன் தெரு வியாபாரி போல் காட்டிக்கொண்டு உளவு பார்ப்பதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். ஜாபுவா, அலிராஜ்பூர், தார் என பல மாவட்டங்களில் அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தலைமறைவான தீபேஷின் கூட்டாளிகளான ரமேஷ், புராலியாவை தேடி வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.











