மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. எனினும் மாநிலத்தில் மறுநாளே வன்முறை வெடித்தது. குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்நிலையில் மனிப்பூரின் உக்ருல் மாவட்டம் லிட்டன் பஜார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வன்முறை வெடித்தது. இதில் பல வீடுகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. இதையடுத்து அருகருகே உள்ள லிட்டன், மாங்கோட் கிராமங்களில் டாங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினர் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 25 வீடுகளும் 4 அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை மோதல்களை தொடர்ந்து பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குகி சமூகத்தை சேர்ந்த சைக்கூல் எம்எல்ஏ கிம்னியோ ஹாவ்கிப், டாங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்த உக்ருல் எம்எல்ஏ ராம் முய்வா ஆகிய இருவரும் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.



