பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால் உள்பட பல கதாநாயகிகளுக்கு தமிழ், மலையாளப் படங்களில் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், 3 ஆண்டுகளாகத் தொல்லைஅளித்துவரும் நபர்களிடம் இருந்து தன்னையும் தனது நண்பர்கள், குடும்பத்தினரையும் பாதுகாக்கக் கோரி அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இதுபற்றி அவர், “தொடர்ந்து 3 ஆண்டுகளாகத் தொல்லை அளித்து வரும் நபர்களிடம் இருந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்கவே இதைப் பதிவிடுகிறேன். போலீஸில் அளித்த புகார்கள், எச்சரிக்கைகள் இதை நிறுத்திவிடும் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருந்தேன்.
ஆனால், சபரீஷ் என்பவரும் அவரது இரட்டை சகோதரரும் என்னையும் என் குடும்பத்தினரையும் நண்பர்களையும் தொடர்ந்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வருகிறார்கள். அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை மட்டுமல்லாமல் எனக்கு நெருங்கியவர்களையும் இலக்காக்கி குறுஞ் செய்திகளை அனுப்பி வருகிறார்கள்.
என்னால் இந்தத் தொல்லைகளைச் சந்திக்க நேர்ந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் சட்டப்பூர்வ வழிகளை மேற்கொண்டோம். ஆனால் தொல்லைகள் நிற்கவில்லை. அவர் பல வலைதளக் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலம் என்னையும் பல நடிகைகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். நாங்கள் பழகியதாகவும் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும் பொய் கதைகளைப் பதிவிட்டு வருகிறார்.
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று சொல்வார்கள். அதை நிரூபிக்க, இதுபோன்ற விஷமிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.



