ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா – இந்தியா ‘ஏ’ அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான நாராயணன் ஜெகதீசன் 55 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் விளாசினார். கேப்டன் ஆயுஷ் பதோனி 26 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், திலக் வர்மா 24 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், பிரியன்ஷ் ஆர்யா 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் சேர்த்தனர்.
239 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அமெரிக்க அணி 19.4 ஓவர்களில் 200 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமெரிக்க அணியின் பேட்டிங்கில் ஆண்ட்ரீஸ் கோஸ் 44, சஞ்ஜய் கிருஷ்ணமூர்த்தி 41, ஷுபம் ரஞ்சனே 28, ஹர்மீத் சிங் 25 ரன்கள் சேர்த்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் ரவி பிஷ்னோய் 3, கலீல் அகமது 2, நமன் திர் 2 விக்கெட்களை வீழ்த்தினர். மயங்க் யாதவ் 3 ஓவர்களை வீசி 37 ரன்களை வழங்கிய நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.



