வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக மேற்குவங்கத்தில் ஆன்லைன் விசாரணை நடைமுறை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 58,20,898 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. மேலும் எஸ்ஐஆர் படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாத 95 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகங்களில் முறையிட்டு வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களது ஆவணங்களின் நம்பகத் தன்மையை தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர்கள் நேரில் ஆஜராக முடியாத சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் ஆன்லைன் விசாரணை நடைமுறையை தொடங்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரிகள் கூறியதாவது: வெளியூரில் தங்கியிருக்கும் வாக்காளர்களுக்காக ஆன்லைன் விசாரணை நடைமுறையை தொடங்க உள்ளோம். இதற்காக விரைவில் டிஜிட்டல் தளம் தொடங்கப்படும். இதில் வாக்காளர்கள் ஆன்லைன் வாயிலாக ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். விசாரணை நாளின் போது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நேரில் ஆஜராக வேண்டும்.
சம்பந்தப்பட்ட வாக்காளர் ஆன்லைன் வாயிலாக விசாரணையில் பங்கேற்று விளக்கம் அளிக்கலாம். சில தேர்தல் அலுவலர்களின் (பிஎல்ஓ) நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. தவறிழைக்கும் பிஎல்ஓக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



