டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பிரார்த்தனையில் பங்கேற்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் ஒன்றிணைந்து இவ்விழாவைக் கொண்டாடினர். இதையொட்டி, டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று காலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து அவர் பிரார்த்தனைகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் திருவிழாவுக்குரிய மகிழ்ச்சி, சிந்தனை மற்றும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் பிரார்த்தனைகள், கிறிஸ்துமஸ் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள் இடம்பெற்றன. மேலும், டெல்லி பிஷப் மேதகு பால் ஸ்வரூப் பிரதமருக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “டெல்லியில் உள்ள ‘தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன்’ தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை வழிபாட்டில் கலந்து கொண்டேன். இந்த வழிபாடு அன்பு, அமைதி மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்தியைப் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “அனைவருக்கும் அமைதி, கருணை மற்றும் நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.







