புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா நகரில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 41 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் பாருக்கின் (என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்) மனைவி அபிரா பிபி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மகளிர் பிரிவான ஜமாத்-உல்-மொமினட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேர்ந்தார். அவருக்கு அந்த அமைப்பின் ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா.சபையால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசாரின் இளைய சகோதரி சாதியா அசார் இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இப்போது அபிரா பிபி சாதியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர் அந்த அமைப்பில் இணைந்த சில வாரங்களில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.














