தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் ஓர் அங்கமாக உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியானது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்திருந்தது. தொடர்ந்து சொந்த மண்ணில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றிருந்தது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்திருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கூறும்போது, “தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மிகவும் முக்கியமானது. அந்த அணி நடப்பு சாம்பியனாக இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்கள் 1-1 என டிரா செய்திருந்தாலும், நாங்கள் சிறந்த ஃபார்மில் இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
அணியில் நாங்கள் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கி உள்ளோம். இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டோம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரையும் வென்றுள்ளோம். தனிப்பட்ட முறையில், எனது பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. நல்ல ரிதம் உள்ளதால் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வலுவான அணிகளை எதிர்கொள்ளும்போது தான் பந்து வீச்சில் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண முடியும். சவாலுக்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் முகமது சிராஜ் 23 விக்கெட்களையும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் 10 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார். சிறந்த பார்மில் உள்ள அவர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.














