காங்கிரஸ் தலைவர் கார்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்று அழைத்து கொள்ளும் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தை புறக்கணித்தன. கடந்த 1925-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது முதல் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்கப்பட்டது கிடையாது.
ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் சுமார் 52 ஆண்டுகள் தேசிய கொடியும் ஏற்றப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஆர்எஸ்எஸ் வசை பாடியது. மகாத்மா காந்தி, அம்பேத்கரின் உருவ பொம்மைகளை அந்த அமைப்பினர் எரித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி 1896-ம் ஆண்டு முதல் இன்றுவரை ஒவ்வொரு கூட்டத்திலும் வந்தே மாதரம் பாடலையும், தேசிய கீதத்தையும் இசைத்து வருகிறது. தேசிய ஒற்றுமையை போற்றிப் பாதுகாத்து வருகிறது. இவ்வாறு கார்கே கூறினார்.














