ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலம், பண்டபல்லி எனும் கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் சுஜாதா எனும் ஆசிரியை, பாடம் சொல்லித் தரும் நேரத்தில் 2 மாணவிகளை அழைத்து, கால்களை பிடித்து விடச் செய்துள்ளார். அப்போது அந்த ஆசிரியை செல்போனில் பேசிக்கொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டிருக்கும் ஒரு வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதைப் பார்த்த பெற்றோர்கள் பலர் அந்த ஆசிரியையின் செயலை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஆசிரியையை காகுளம் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஜெகன்னாத் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.














