பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மன்னர் சந்திரகுப்த மவுரியா ஆட்சிக் காலம் முதல் இப்போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்புகள் நீடித்து வருகின்றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மேலும் பிஹாரில் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம் அமைக்கப்படும். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் பூங்கா அமைக்கப்படும். பிஹார் இளைஞர்களுக்கு சொந்த மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் கடத்தல், கொள்ளை, கொலைகளுக்காக தனித்தனி துறைகள் உருவாக்கப்படும். ஊழலுக்காகவும் தனித் துறை அமைக்கப்படும். பிஹாரில் மீண்டும் காட்டாட்சி அமைவதை மக்கள் விரும்பவில்லை. இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.
            













