குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞருக்கு 1,000 துண்டுப் பிரசுரங்களை வழங்குமாறு புனே மோட்டார் வாகன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட்டின் ஹின்ஜாவாடி பகுதியில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்து போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து அவர் மீது மோட்டார் வாகன சட்டம் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு, புனே மோட்டார் வாகன நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது.
அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து 1,000 துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டுநர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக பிம்ப்ரி சின்ச்வாட் போக்குவரத்து பிரிவு காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 2,984 வழக்குகளை பிம்ப்ரி சின்ச்வாட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.














