நடிகை ஷாலின் ஜோயா, தமிழில் ‘கண்ணகி’ படத்தில் நடித்திருந்தார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். மலையாளத்தில் அவர் இயக்கிய ‘தி ஃபேமிலி ஆக்ட்’ திரைப்படம் ஏற்கெனவே கவனத்தை ஈர்த்த நிலையில், இப்போது தமிழில் இயக்குநர் ஆக அறிமுகமாகிறார்.
இதை, ‘கலியுகம்’ திரைப்படத்தைத் தயாரித்த ஆர்.கே.இன்டர்நேஷனல் சார்பில் ராமகிருஷ்ணா தயாரிக்கிறார். இதில், ‘நக்கலைட்ஸ்’ அருண் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். மேலும் எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதுவரை பார்த்திராத வேடத்தில் தேவதர்ஷினியும், கவுரவ வேடத்தில் அஷ்வின் காக்குமனுவும் நடிக்கின்றனர்.
இப்படம் பற்றி இயக்குநர் ஷாலின் ஜோயா கூறும்போது, “இது, 90-களின் இறுதியிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் நடைபெறும் கதை. ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவம்அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி கலந்து சொல்கிறோம். திறமையான கலைஞர்களுடன் இந்தப்படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி” என்றார். இப்படத்துக்கு கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.














