இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (2-ம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலை செய்கிறது.
ராஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (2-ம் தேதி) காலை தொடங்குகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த நிலையில் இந்திய டெஸ்ட் தொடரை அணுகுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மோசமான சாதனையை படைத்திருந்தது.
இதைத் தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள் வாரியத்தின் தலைவர் கிஷோர், முன்னாள் வீரர்கள் பலரையும் அழைத்து அணியின் முன்னேற்றத்துக்கு செய்ய வேண்டிய யோசனைகளை கேட்டறிந்தார். இது ஒருபுறம் இருக்க இந்திய டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப் ஆகியோர் விலகி உள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஹன் லேன், ஜெடியா பிளேட்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. அனுபவமற்ற பந்து வீச்சு தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் மட்டுமே. சுழற்பந்து வீச்சில் ஜோமல் வாரிக்கன், காரி பியர் பலம் சேர்க்கக்கூடும்.
இதற்கு நேர்மாறாக, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முழு நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-2 என சமன் செய்திருந்தது. இந்தத் தொடர் கில் கேப்டனாக விளையாடிய முதல் தொடராகவும், ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இல்லாத முதல் தொடராகவும் அமைந்தது.
இந்தப் பயணம் கேப்டனாக ஷுப்மன் கில்லுக்கு வெற்றிரகமானதாக அமைந்திருந்தது. பேட்டிங்கில் அவர், 754 ரன்கள் குவித்திருந்தார். இது இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்களாக அமைந்திருந்தது. அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவர்கள். துணை கேப்டனான ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடும். அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்டதால் அவரது இடத்தை குல்தீப் யாதவ் நிரப்பக்கூடும். 3-வது சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு வலுசேர்க்கக்கூடும். இங்கிலாந்து தொடரில் 23 விக்கெட்கள் வேட்டையாடிய முகமது சிராஜ், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளார்.
இந்தியா: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், நாராயண் ஜெகதீசன், நித்திஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.
மேற்கு இந்தியத் தீவுகள்: ராஸ்டன் சேஸ் (கேப்டன்), கெவ்லான் ஆண்டர்சன், அலிக் அதனேஸ், ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லாக், ஜோஹன் லேன், ஜெடியா பிளேட்ஸ், பிரண்டன் கிங், ஆண்டர்சன் பிலிப், காரி பியர், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன்.
மொத்த ஆட்டங்கள்: 100
இந்தியா வெற்றி: 23
மே.இ.தீவுகள் வெற்றி: 30
டிரா: 47