தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (65) இவர் வியாபாரி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஞானதாஸ் சில ஆண்டுகளுக்கு முன் காட்டாத்துறையில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலையில் எழுந்து நடைபயிற்சிக்கு சென்றார். புலிப்பனம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற டாரஸ் லாரி ஒன்று ஞானதாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஞானதாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டாரஸ் லாரியை தேடி வருகின்றனர்.