வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துவதால், மலைவாழ் மக்கள் பட்டா பெற முடியாமல் தவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நில உரிமையும், பழங்குடி மக்களின் இனச்சான்று, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பும் கோரி சென்னையில் நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் பேசியதாவது: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செலவழிக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
வன உரிமைச் சட்டத்தின்கீழ் இதுவரை 15,442 மலைவாழ் குடும்பங்களுக்கு வன உரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. இச்சட்டத்தைக் கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு உள்ளது. ஆனால், இக்குழு இதுவரை கூட்டப்படவில்லை.
ஆமை வேகத்தில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுத்துவதால் மலைவாழ் மக்கள் பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர். சொந்த வீடு இல்லாத அனைத்து ஆதிவாசி குடும்பங்களுக்கும் இச்சட்டத்தின்கீழ் பட்டா வழங்க வேண்டும் என்றார்.













