வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது. இது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தெற்கே 450 கிமீ தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 370 கிமீ தொலைவிலும் உள்ளது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 22 முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 7 செ.மீ, திருவாரூரில் 6 செ.மீ, மதுரை கல்லந்திரி, சென்னை எண்ணூர், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ, மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.














