காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,601 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,691 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பைவிட நீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 116.13 அடியாகவும், நீர் இருப்பு 87.43 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அது தற்போது குறைந்து வருகிறது. நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக குறைந்தது.














