ஜாபர் சாதிக் ஜாமீன் மனு: டிச.2-க்குள் பதிலளிக்க அமலாக்க துறைக்கு உத்தரவு

0
162

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனுவுக்கு டிச.2-க்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். பின்னர் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமும் கைது செய்யப்பட்டார்.

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீதும், 8 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன் தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி எழில் வேலவன் முன்பாக நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அதையடுத்து இந்த வழக்கை நீதிபதி டிச.2-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதற்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here