டெல்லியில் இணைய குற்ற வழக்கில் தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்திய அமலாக்க துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கியூஆர் குறியீடு மோசடி, பிஷிங், பகுதிநேர வேலை மோசடி போன்ற இணைய குற்றங்கள் குறித்து ஐ4சி மற்றும் நிதி புலனாய்வு பிரிவிடமிருந்து (எப்ஐயு) அமலாக்க இயக்குநரகத்துக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய ஆய்வில், இந்த மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை 15 ஆயிரம் போலி வங்கி கணக்குகள் மூலம் பெறுவது தெரியவந்தது. இந்தப் பணம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பீப்பிள் செயலி (Pyypl App) மூலம் பணத்தை எடுத்து கிரிப்டோ நாணயங்களை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் உள்ள ஒரு பண்ணை இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதனிடையே, சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகள் மீது அசோக் சர்மா மற்றும் அவரது சகோதரர் தாக்குதல் நடத்தி உள்ளனர். எனினும், போலீஸார் உதவியுடன் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தென்மேற்கு டெல்லியின் கபஷெரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.














