பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்

0
362

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியவானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தற்போது வடதமிழகம், தெற்கு ஆந்திரகடற்கரை பகுதிக்கு அப்பால் நிலவுகிறது.

கனமழை வாய்ப்பு: இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட கடலோரம், தென் தமிழகம்,மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15-ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.

தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை. மேற்கு திசையில் நகர்ந்து,மெதுவாக கரையைகடந்து செல்லும். சென்னை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தற்போதுள்ள மழையின் அளவிலேயே தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

செயல்பாட்டு வழிமுறை: அக்கடிதத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி, கன மற்றும் மிக கனமழை பெய்யும் நிலையில், நிலைமையை கையாள வேண்டும். இதற்காக மாவட்டம் முழுவதும், தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் 17-ம் தேதி வரையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ள மழை தொடர்பான எச்சரிக்கையையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here