எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் டிச.10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு செப்.20-ம் தேதி அண்ணாமலை கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், அந்தக் கடிதத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களும் டிச.10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு, இந்தியா திரும்புவார்கள். இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்குச் செய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.