அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப், ஈரான் சபாநாயகர் ஆன்லைனில் கையெழுத்து

0
19

மத்திய கிழக்கில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா – ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆன்லைன் மூலமாக கையெழுத்திட்டுள்ளன. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் இந்த தொடக்கநிலை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரபூர்வ கையெழுத்து நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் உலக நாடுகளுக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் உச்ச தலைவரின் முழுமையான ஆதரவுடனேயே சபாநாயகர் காலிபாஃப் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு தாக்குதல்களுக்குப் பிறகு, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருந்தது. இந்த அமைதி ஒப்பந்தத்தின் உடனடி விளைவாக, ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து தொடங்கவுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பாவிட்டாலும், வரும் நாட்களில் போக்குவரத்து பலமடங்கு அதிகரிக்கும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. 

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதி ஆதாரங்களை விடுவிக்கவும், அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளைத் தளர்த்தவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், பரந்த அளவிலான சலுகைகளை வழங்குவதற்கு முன்பாக, ஈரான் தனது அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. 

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் தனியாகத் தொடரும் என்றும், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறுவது இந்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனை அல்ல என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here