இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோரை தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார்.
அவரிடம் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக பதில் தாக்குதலை இந்தியா கொடுக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாது கத்தார், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
“அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உடன் பேசினேன். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதியை பாராட்டுகிறேன். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு இந்தியா தகுந்த பதிலடியை கொடுக்கும் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டி பேசியுள்ளேன். அதில் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துள்ளேன்” என கூறியுள்ளார்.
எல்லை பகுதிகளில் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியை முன்னெடுத்தது. உதம்பூர், சத்வாரி, சம்பா, ஆர்எஸ்.புரா மற்றும் ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் தரப்பு குறிவைத்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சைரன் ஒலி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்நிலையில், நள்ளிரவுக்கு பிறகு இந்திய பாதுகாப்பு படை பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல்.