Home சினிமா செய்திகள் ரூ.350 தொடங்கி ரூ.3000 வரை டிக்கெட் விலை: வசூல் சாதனையை நோக்கி ‘புஷ்பா 2’ 

ரூ.350 தொடங்கி ரூ.3000 வரை டிக்கெட் விலை: வசூல் சாதனையை நோக்கி ‘புஷ்பா 2’ 

0

அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் விலை உயர்வால், ‘புஷ்பா 2’ படம் வசூல் சாதனை படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கிறது ‘புஷ்பா 2’. நீண்ட நாட்கள் படப்பிடிப்பு, பெரும் பொருட்செலவு, இசையமைப்பாளர் மாற்றம் என பல்வேறு சிக்கல்களை கடந்து வெளியாகிறது. அனைத்து ஏரியாவிலும் முன்னணி விநியோகஸ்தர்கள் மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே வெளியிடுகிறது. தயாரிப்பு நிறுவனத்தின் முடிவினால் மும்பை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியான டிக்கெட் விலையை நிர்ணயித்துள்ளார்கள்.

டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று சென்ற ரசிகர்களுக்கு ரூ.300, ரூ.700, ரூ.1200, ரூ.3000 என்று விலை இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பான தங்களது அதிருப்தியை எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள். மும்பையில் டிக்கெட் விலை 3000 ரூபாய், கர்நாடகாவில் 1250, 700, 650 ரூபாயாகவும், ஆந்திராவில் 1200, 700, 350 ரூபாயாகவும் விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

இதனை ஆன்லைன் மூலமாகவே தொடங்கியிருப்பது தான் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பான பதிவுகளுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்தவொரு பதிலுமே அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் டிக்கெட் விலை ஏற்றத்துக்கு அரசு அனுமதி அளிப்பதில்லை. இதனால் வழக்கமான டிக்கெட் விலையே விற்பனை செய்யப்படும். இம்மாதிரியான டிக்கெட் விலை ஏற்றத்தினால், ‘புஷ்பா 2’ படத்தின் முதல் நாள் வசூல் கண்டிப்பாக பெரும் சாதனையாக இருக்கும் என்கிறார்கள். ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் தான் இந்தியளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது.

அந்தச் சாதனையை கண்டிப்பாக ‘புஷ்பா 2’ முறியடிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளார்கள். டிக்கெட் முன்பதிவில் மட்டுமே சுமார் ரூ.40 கோடி ரூபாயை ‘புஷ்பா 2’ ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தும், பின்னணி இசைக்கு சாம் சி.எஸ், அஜ்னீஷ் லோக்நாத் மற்றும் தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். டிசம்பர் 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version