தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக பல மாவட்டங்களில் அமோக வெற்றிபெற்றாலும் கன்னியாகுமரி, தென்காசி, விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் ஓர் இடத்தில்கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களை வென்றுள்ளது. திமுகவின் கோட்டை எனக் கருதப்படும் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.
அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியும் அடங்கும். மேலும், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10-ல் 9 தொகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7-ல் 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறது.
அதுமட்டுமின்றி, திமுகவுக்கு பெரிதும் கைகொடுக்கும் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், தென்மண்டலம் அதேபோல், அதிமுக மிகவும் வலிமையாக இருக்கக்கூடிய மேற்கு மண்டலத்திலும் தவெக அதிக இடங்களில் வென்றுள்ளது.
விசில் புரட்சியால் தமிழகம் முழுவதும் பரவலாக திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்தினாலும் கன்னியாகுமரி, தென்காசி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் தவெகவால் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
இந்த பகுதிகளுக்கு அவர் பிரச்சாரம் செல்லாமலும் இல்லை. இத்தனைக்கும் மேலாக தவெக முதல் மாநாடு நடத்தப்பட்ட விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் கூட வெல்ல இயலவில்லை.
திமுக, அதிமுக இரு கட்சிகளும் இந்த மாவட்டங்களில் பலமான வாக்கு வங்கியுடன் இருப்பதே இதற்குக் காரணம். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல இந்த மாவட்டங்களிலும் முதல்முறை வாக்காளர்களாகிய இளம் வாக்காளர்களும் கணிசமாகவே உள்ளனர்.
இம்மாவட்டங்களை கல்வியில் முன்னேறிய மாவட்டங்கள், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என்று வகைப்படுத்திவிடவும் முடியாது. காரணம் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த 8 மாவட்டங்களில் தலா ஒன்றிரண்டு தொகுதிகளில் வென்றிருந்தால்கூட எந்த கட்சிகளின் தயவையும் எதிர்பாராமல் தனிப்பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைத்திருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
