உள்நாட்டில் 100 நாளில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி அனைத்து சோதனைகளையும் முடித்து மத்திய ஆயுதப்படைகளுக்காக கொள்முதல் செய்யப்படவுள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘த்விப்பா’. ராணுவம் மற்றும் போலீஸாருக்கு துப்பாக்கிகள் தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு உரிமம் பெற்று இதுவரை 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ரகங்களை உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனத்தில் யு-19 இயந்திரத் துப்பாக்கி, இலகு ரக இயந்திரத் துப்பாக்கி, யு-45, யு-39 ரைபிள்கள், ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கிகள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் த்விப்பா நிறுவனமும் இணைந்து ‘உக்கிரம்’ 7.62 x 51 எம்.எம் ரக துப்பாக்கியை வடிவமைத்து தயாரிக்கும் முயற்சியில் இறங்கின. இது உள்நாட்டில் 100 நாட்களில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இந்த துப்பாக்கி ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனைத்து வித தரப் பரிசோதனைகளையும் நிறைவு செய்துவிட்டது. இதனால் உக்கிரம் துப்பாக்கி மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ், சஷஸ்த்ரா சீமாபால் (எஸ்எஸ்பி) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) போன்ற மத்திய ஆயுதப்படைகளின் பயன்பாட்டுக்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இது குறித்து த்விப்பா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிபி ஜோசப் அளித்த பேட்டியில், “உக்கிரம் துப்பாக்கி 4 கிலோ எடைக்கும் குறைவானதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 500 மீட்டர் தூரம் உள்ள இலக்குகளை சுட முடியும்” என்றார்.















