எஸ்.ஜே.சூர்யாவின் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது, சிலிண்டர் வெடித்து தொழில்நுட்ப கலைஞர் உயிரிழந்தார். திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, 10 வருடங்களுக்கு முன்பு ‘இசை’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அதற்கு பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது, அவர் ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இதில், ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார்.
ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில், காருக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஜெர்மனியிலிருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்காக சென்னை, பெரம்பூரிலுள்ள பின்னி மில்லில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நெருப்பு வளையத்துக்குள் நின்று சண்டையிடுவது போன்ற காட்சியை படமாக்குவதற்காக பெரிய சிலிண்டரிலிருந்து மற்றொரு சிறிய சிலிண்டருக்கு கார்பன் டை ஆக்சைடு வாயுவை பணியாளர்கள் மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. 10-க்கும் மேற்பட்டோர் காயம் இதில், தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வந்த மதுரவாயலை சேர்ந்தவர்களான மதன் (25), சூர்யா (23), நெற்குன்றம் தினகரன் (24), குன்றத்தூர் சக்திவேல் (27), உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராம் பாண்டே (34) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டோருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.
இவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதன் உயிரிழந்தார். 4 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக, ஓட்டேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















