என் வாழ்க்கையை மாற்றியதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது: பிரதீப் ரங்கநாதன்

0
124

என் வாழ்க்கையை மாற்றியதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்று ’எல்.ஐ.கே’ விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ராம், மிஷ்கின், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசும் போது, “நான் கல்லூரி படிக்கும் போது என் முன்னாள் காதலியுடன் பார்த்த படம் ’நானும் ரௌடிதான்’. அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் செய்வதாக சொன்னபோது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன். நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் செய்ய வேண்டும் என்று. அதற்கான கதைகளையும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் மிகவும் குறைவு. அதனாலேயே அந்த ஐடியா கேட்டவுடன் “சூப்பர்!” என்ற உணர்வு எனக்கு வந்தது. அவர் கதை முழுவதுமாக சொல்லி முடித்தவுடன், இந்தப் படம் செய்வது நிச்சயம் என்று ஃபிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் ‘அனிருத் மியூசிக்’ ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவில் எல்லாருக்கும் அவருடைய வேலை செய்ய ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று.

தேங்க்ஸ் ப்ரோ. உங்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி. அவருடைய திறமைகள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது ; அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தெரிவார்கள். அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீர்கள். உங்களுடன் இன்னும் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும், இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நான் காலேஜ் முடித்த பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன்.

அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று. அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.

அந்த நாளிலிருந்து இன்றுவரை நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தன. என் வாழ்க்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

இன்று அவருடன் இந்தப் படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம். சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது. அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேச வேண்டுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here