கல்வி வளாகங்களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பிரவீன் தீட்சித் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் கடந்த கால செயல்பாடுகள் என்னென்ன, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.
அப்போதுதான் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கும் என்பது தெரிய வரும். அந்த நபர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அனுமதியின்றி வெளியாட்கள் நுழைவதைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பாதுகாப்பு ஊழியர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை துணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். பெண்களிடையே ‘112 இந்தியா’ என்ற அவசரகால உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் புகாரை உறுதிப்படுத்த பெண் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். வழக்கு விசாரணையின்போது அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.