புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (35). இவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரிடம் சிலர் பத்திரிக்கை நிருபர்கள் என கூறி மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 3) ஜஸ்டின் ராஜை அழைத்து 1 லட்சம் ரூபாயுடன் புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பகுதியில் வர கூறியுள்ளனர்.
இது குறித்து ஜஸ்டின் ராஜ் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆலோசனையின்படி ஜஸ்டின் ராஜ் கூட்டாலுமூடு சென்றார். அங்கு ஒரு காரில் போலி நிருபர்கள் இருந்தனர். ஜஸ்டின் ராஜ் சென்றதும், பணத்தை கேட்டுள்ளனர். உடனே பின்னால் சென்ற போலீசார் காரில் இருந்த 8 நபர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்ட 8 நபர்களும் நீதி வலை என்ற பத்திரிகையில் பணிபுரிவதாக அடையாள அட்டை வைத்திருந்தனர். தொடர் விசாரணையில் பிடிபட்டவர்கள் ஆன்டனி (51), சுனில் (33), லால் (36), செல்வராஜ் (37), சுரேஷ் பேபி (52), வெல்பின் ஜோஸ் (41), மணிகண்டன் (38), சகாய ஜாண் போஸ்கோ (58) என தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் ஒரே நிறுவனப் பெயரில் அடையாள அட்டை வைத்திருந்தனர். இதையடுத்து புதுக்கடை போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.