Pahalgam Terror Attack: மனைவி, குழந்தைகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட தெலங்கானா உளவுத் துறை அதிகாரி

0
37

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரி தனது மனைவி, குழந்தைகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஹைதராபாத்தில் பணியாற்றி வரும் மணீஷ் ரஞ்சன் என்ற உளவுத் துறை அதிகாரியும் ஒருவர். பிஹாரைச் சேர்ந்த மணீஷ் ரஞ்சன், கோடை விடுமுறையை தனது குடும்பத்துடன் கழிக்க காஷ்மீர் சென்றுள்ளார்.

‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் மணீஷ் ரஞ்சனின் குடும்பத்தினர் உட்பட ஏராளமான குடும்பங்கள் அங்கு இயற்கை அழகை கண்டுரசித்தபடி இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்து பயணிகளை சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி சராமாரியாக சுட்டனர். இதில் தன் மனைவி, குழந்தைகளின் கண்முன்னே மணீஷ் ரஞ்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்கள் இந்திய மக்களின் மன உறுதியை அசைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போல் தெரிகிறது. பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர். அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் 2019-ல் நடத்திய தாக்குதலில் 47 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here