தமிழகத்தில் 2024-ம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு பொருத்தியதில் 1,500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப். 23-ம் தேதி முதல்வர் அறிவித்தார். இதைப் பின்பற்றி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு மரியாதை அறிவிப்புக்கு பின்னர், தமிழகத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனர். அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023-ல் 178 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தானமாக பெற்ற உறுப்புகள் மூலமாக 1,000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 28 பேரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. ஒருவர் மூளைச்சாவு அடையும்போது அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அதைத் தொடர்ந்து உறுப்புகளை பொருத்த வேண்டும்.
இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் ஏராளமானோருக்கு மறுவாழ்வும் கிடைத்துள்ளது.