2027 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சொந்த மண்ணில் நடைபெறுவதால் எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2027-ல் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் ரபாடா கூறியதாவது:
2003-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியை நடத்துவதில் எங்களுக்கு பெருமை.
இந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கள் சொந்த மண்ணில் விளையாடுவதால் எங்களுக்கு எந்தவித கூடுதல் அழுத்தமும் இருக்காது என்று நான் நம்புகிறேன்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். சமீப காலமாக டெஸ்ட், ஒருநாள் போட்டி, சர்வதேச டி20 போட்டிகளில் எங்கள் அணி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நாங்கள் வென்று சாதனை படைத்தோம்.
கிரிக்கெட் போட்டியின் 3 வடிவங்களிலும் தென் ஆப்பிரிக்க அணி வெளிப்படுத்திய சீரான சிறப்பான ஆட்டம் எங்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
குறிப்பாக 2025-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றியே இதற்கு சான்றாகும்.
எங்களது சொந்த மண்ணில் 2027 உலகக் கோப்பை நடைபெறுவது ஒருவித சுதந்திர உணர்வைத் தருகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதாலோ அல்லது வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தாலோ ஏற்படும் அழுத்தத்தை நான் உணரவில்லை.
நாங்கள் எங்கள் சொந்த வீட்டில் இருக்கிறோம். எங்கள் கோட்டையைக் காக்கப் போகிறோம் என்பது போன்ற உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது.
1992-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் வெளிப்படுத்திய சிறப்பான பந்துவீச்சு எனக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
அக்ரமின் செயல்பாடு, ஆட்டத்தின் போக்கையே மாற்றி பாகிஸ்தான் தனது முதல் உலகக் கோப்பையை வெல்ல உதவியது. அதேபோல, 2027 உலகக் கோப்பையைச் சொந்த மண்ணில் நடத்தும்போது தென் ஆப்பிரிக்காவுக்காக ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும் வகையிலான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நான் விரும்புகிறேன். நான் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்பதால், பந்து வீச்சாளர்கள் சார்ந்த ஒரு சிறந்த தருணத்தையே விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
