பிரதமரின் சுற்றுப் பயணத்தின்போது செய்தியாளர் சந்திப்புகளில் கேள்வி-பதில் நேரங்கள் ஒதுக்கப்படாதது குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருடன் பிரதமர் மோடி நடத்திய கூட்டு ஊடகச் சந்திப்பின்போது, இரு தலைவர்களும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிரதமர் மோடியை வழிஅனுப்பிய பிறகு, நார்வே பிரதமர் அந்நாட்டு ஊடகங்களிடம் தனியாகப் பேசினார். இதுகுறித்துப் பத்திரிகையாளர் ஸ்வெண்ட்சன் சமூக ஊடகத்தில் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம், அன்று மாலை நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பிற்கு வந்து தங்களின் கேள்விகளைக் கேட்கலாம் என்று அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியான சிபி ஜார்ஜுக்கும், பத்திரிகையாளர் ஸ்வெண்ட்சனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
பத்திரிகையாளர் அடுத்தடுத்து குறுக்கிட்ட போதிலும், இந்தியாவின் தேர்தல் முறை, அமைதியான முறையில் நிகழும் ஆட்சி மாற்றம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைச் சுட்டிக்காட்டி சிபி ஜார்ஜ் இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்க்கமாகப் பாதுகாத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நெதர்லாந்து நாட்டின் பயணத்தின் போதும் பிரதமரின் செய்தியாளர் சந்திப்புகள் குறித்து இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது.
நாம் உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்காக இருக்கிறோம்; ஆனால் உலகப் பிரச்சினைகளில் ஆறில் ஒரு பங்காக நாம் இல்லை. இந்தியாவின் பிரம்மாண்டத்தைப் பற்றிப் பலருக்குப் புரிதல் இல்லை. ஏதோ சில அறியாமையுள்ள தொண்டு நிறுவனங்கள் வெளியிடும் ஒன்று அல்லது இரண்டு அறிக்கைகளைப் படித்துவிட்டு வந்து இங்கு கேள்வி எழுப்புகிறார்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாம் பல நூற்றாண்டுகளாக ஒரு ஜனநாயகச் சமூகமாக வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் உள்ள சகிப்புத்தன்மைதான் நம் பன்முகத்தன்மைக்குக் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.















