“ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை; காலம் கடந்துவிட்டது” – ட்ரம்ப் திட்டவட்டம்

0
107

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (மார்ச் 3) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை  மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் இப்போது இல்லாமல் போய்விட்டன. இப்போது அவர்கள் எங்களுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், காலம் கடந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட பிறகு, அந்நாடு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், ட்ரம்ப் அதனை நிராகரித்துள்ளார்

இதற்கிடையில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபைக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரைனி கூறுகையில், “தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவது பயனுள்ளதாக இருக்குமா என்பதில் எங்களுக்குப் பெரிய சந்தேகம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் ராணுவ முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால், ஈரான் தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கான ஆர்வம் குறைந்துள்ளதாக தெரிகிறது.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த பிடிவாதமான முடிவு, ஈரானின் ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கியே அமெரிக்கா காய்களை நகர்த்துவதை உறுதிப்படுத்துவதாக உலக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here