Home உலக செய்திகள் “ஈரான் மீதான பொருளாதார தடைகள் எதுவும் நீக்கப்படாது” – ட்ரம்ப் திட்டவட்டம்

“ஈரான் மீதான பொருளாதார தடைகள் எதுவும் நீக்கப்படாது” – ட்ரம்ப் திட்டவட்டம்

0

ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைப்பதற்குக் கைமாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் எதுவும் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலிலும், அமெரிக்கா தனது கடுமையான வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டைச் சற்றும் தளர்த்தத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலின் போது, தற்போதைய பேச்சுவார்த்தை உடன்படிக்கையின்படி அணுசக்தி சலுகைகளுக்குப் பதிலாக ஈரானுக்குப் பொருளாதாரத் தடைகளில் ஏதேனும் தளர்வுகள் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் “இல்லை, இல்லவே இல்லை. பொருளாதாரத் தடை நீக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் தங்களின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்கப் போகிறார்கள், ஆனால் அதற்காகத் தடைகள் நீக்கப்படாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், ஈரான் ஒப்பந்தம் செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளது, ஆனால் இன்னும் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை எட்டவில்லை என்று அவர் கூறினார். தற்போதைய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், “நாங்கள் இதில் திருப்தியடையவில்லை, ஆனால் விரைவில் திருப்தியடைவோம். இல்லையெனில் நாங்கள் இந்த வேலையை ராணுவ நடவடிக்கை மூலம் முடிக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் 30 நாட்களுக்குள் வணிகக் கப்பல் போக்குவரத்தைப் போருக்கு முந்தைய நிலைக்குக் கொண்டு வரவும், அதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தளர்த்தி ராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கவும் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு தயாராகியுள்ளதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால், இந்தத் தகவலை முற்றிலும் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று கூறி வெள்ளை மாளிகை சில மணி நேரங்களிலேயே நிராகரித்து விட்டது.

இன்னொரு புறம் ஈரானுடனான பேச்சுவார்த்தை நன்றாகச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளதால், அடுத்த சில நாட்களில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version