ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் கூடியிருந்த ஈரானிய தலைவர்களை ஒரே குண்டில் அமெரிக்காவால் கொல்ல முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பக்க பதிவில், “மனிதர்களை வேண்டுமானால் குண்டு வீசி கொல்ல முடியும், ஆனால் அவர்களின் மனதில் திடமாக பதிந்துள்ள கொள்கைகளை ஒரு போதும் கொல்ல முடியாது. அமெரிக்காவிற்கு நாகரிகமோ, வரலாறோ அல்லது கண்ணியமோ இல்லை” என்று ஈரான் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் அரசு சார்பில் மிக பிரம்மாண்டமான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈரானின் தற்போதைய முக்கிய தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் குறித்து பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “கமேனியை மக்கள் வெறுப்பதாகவே நான் நினைத்தேன், அங்கு மக்கள் சிந்துவது போலி கண்ணீராக இருக்கலாம்” என்று விமர்சித்தார். மேலும், “அங்கு ஈரானின் ஒட்டுமொத்த முக்கிய தலைமைகளும் கூடியுள்ளனர்.
நான் நினைத்தால் ஒரே குண்டில் அவர்கள் அனைவரையும் வீழ்த்திவிட முடியும். ஆனால், நாம் அதைச் செய்யப் போவதில்லை; ஏனெனில், அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கே எவரும் இருக்க மாட்டார்கள்” என்று ட்ரம்ப் ஏளனமாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு கடுமையான எதிர்வினையாற்றும் வகையிலேயே ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது.
