இரையுமன்துறை மற்றும் தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளில் ரூ. 120 கோடி மதிப்பில் அலை தடுப்பு சுவர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை நேற்று மீனவர் நலத்துறை ஆணையர் கஜலட்சுமி, குமரி கலெக்டர் அழகு மீனா ஆகியோர் பார்வையிட்டனர். அதோடு, அந்த கடலோரப்பகுதிகளில் மீனவர்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீன்பிடித்துறைமுக விரிவாக்க பணிகளை டிசம்பர் 2025க்குள் முடித்து மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் பயோ கழிவறை எனப்படும் கழிவறை இல்லாததால் மீனவர்களின் சிரமத்திற்குள்ளாகிறது. அதுமட்டுமின்றி கடலில் தவறி விழுந்து உயிரிழப்பிற்கும் காரணமாகிறது. எனவே மீன்பிடி விசைப்படகுகளில் பயோ கழிவறை அமைக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.














